சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தை கொஞ்சம் வலுப்படுத்துங்கள்-வைகோ
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்று பொது மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, ஒரு கோடி... ஒன்றரை கோடி என்று உங்களிடம் (முதல்வர் ஜெயலலிதா) நிதி கொடுக்கிறார்களே அமைச்சர்கள்?. இந்தப் பணம் எப்படி வந்தது?.
வெளிப்படையாகவே அவர்களால் இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறதென்றால், இதைவிட நூறு மடங்கு உங்களுக்கு கப்பம் கட்டினார்களா?.
திமுக அரசில் நிர்வாகச் சீர்கேடு என்றீர்களே. இப்போது உங்கள் ஆட்சியிலும் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களே... ஆனால், சென்னையைச் சுற்றிலும் பெரும் தொழிலதிபர்கள் நடத்துகின்ற நிறுவனங்களுக்கு இந்த அளவுக்கு பாதிப்பில்லையே.. ஏன்?. எந்தக் கப்பம் உங்கள் தோட்டத்துக்கு வந்து சேர்கிறது?.
பிரேக் இல்லாத வாகனமாகச் சென்று கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி. அதற்கு பிரேக் போடவேண்டும் இந்தத் தொகுதி மக்கள். வெற்றி பெற்று பிரேக்கை இயக்குபவராக இருப்பார் எங்களின் வேட்பாளர் சதன் திருமலைக்குமார்.
என் கொள்கையில் தவறு இருந்திருக்கலாம். எங்கள் அணுகுமுறையில் விமர்சனம் எழுந்திருக்கலாம். ஆனால் என் சொந்த வாழ்க்கையினை சுகபோகம் ஆக்கிக் கொள்வதற்காக நான் இம்மியளவும் நெறி தவறியதில்லை. இங்கே சங்கரன்கோவில் வீதியில் நின்று கேட்கிறேன், என் கரத்தைக் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் என்றார்.
நாஞ்சில் சம்பத் பேச்சு:
இந் நிலையில் மேலநீலித நல்லூர் ஒன்றிய மதிமுக சார்பில் சேர்ந்தமரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்,
47 ஆண்டு காலமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நோக்கத்துடன் வைகோ செயல்பட்டு வருகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆகட்டும், இலங்கைத் தமிழர் பிரச்சனை ஆகட்டும். தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது மதிமுக தான்.
சங்கரன்கோவில் தொகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்தது வைகோ தான் என்றார்.












Click it and Unblock the Notifications