மீனவர்கள் கொலை வழக்கு: கோர்டுக்கு வெளியே செட்டில் பண்ணும் இத்தாலியின் கோரிக்கையை ஏற்ற இந்தியா
டெல்லி: கேரள கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேர் இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேரை அங்கு வந்த இத்தாலிய நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் இத்தாலி நாட்டு பாதுகாவலர்கள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கொச்சி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எண்ணெய் கப்பலை தங்களிடம் ஒப்படைக்குமாறு இத்தாலிய கப்பல் நிறுவனம் கோரியது. ரூ.3 கோடி கொடுத்துவி்ட்டு கப்பலை எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துப் பேச இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் டெர்ஸி டெல்லி வந்தார். அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து சுமூகத் தீர்வு காணலாம் என்று டெர்ஸி அறிவுறுத்தினார். இத்தாலி-இந்தியா இடையேயான உறவு பாதிக்கக் கூடாது என்று நினைத்து எஸ்.எம். கிருஷ்ணாவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நஷ்டஈடு கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் இழுத்துக் கொண்டிருப்பதை விரும்பாத இந்தியாவும், இத்தாலியும் இதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications