சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசனுக்கு 3 ஆண்டு சிறை
திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசனுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 3 முறை அமைச்சராகப் பதவி வகித்தவர்..
கோமதி சீனிவாசன்
கோமதி சீனிவாசன் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் தொடக்கத்தில் அ.தி.மு.க.வில் இருந்தார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பிறகு கடந்த 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார்.
கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2001-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
வழக்கு
கோமதிசீனிவாசன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள். இதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.13 லட்சத்திற்கு சொத்து வாங்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கோமதி சீனிவாசனை தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு தஞ்சாவூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஊழல் தடுப்பு வழக்கு தனி நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூரில் நடைபெற்று வந்த இந்த வழக்கை திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு தனி நீதிமன்றத்துக்கு கடந்த ஜனவரி மாதம் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு கோமதி சீனிவாசன் மீதான சொத்து குவிப்பு வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 3 ஆண்டுகள் 4 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து கோமதி சீனிவாசனை போலீசார் திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள மகளிர் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications