சென்னை என்கெளன்டரில் கொல்லப்பட்ட 2 பேரின் உடல்களை வாங்க குடும்பத்தார் மறுப்பு
சென்னை: சென்னையில் போலீஸ் என்கெளன்டரில் கொல்லப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள வினய் பிரசாத் மற்றும் ராஜீவ் குமார் ஆகியோரின் உடல்களை வாங்க அவர்களது குடும்பத்தினர் மறுத்துள்ளனராம். இதனால் உடல்களை பீகார் போலீஸாரிடம் ஒப்படைக்கலாமா என்பது குறித்து சென்னை போலீஸார் யோசித்து வருகின்றனர்.
சென்னையில் இரு வங்கிகளில் துணிகரமாக துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய 5 வட மாநில கொள்ளையர்களை வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வைத்து போலீஸார் என்கெளன்டரில் கொன்றனர்.
இவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதில், வினோத்குமார் என்கிற சுஜாய் குமார் ரே, வினய் பிரசாத், ராஜீவ்குமாரின் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இதில் வினோத்குமார்தான் கொள்ளைக் கூட்டத் தலைவன். இவன் மீது மும்பை, பீகார் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவனது உடலை குடும்பத்தினர் பெற்றுச் சென்று விட்டனர்.
ஆனால் வினய் பிரசாத், ராஜீவ் குமாரின் ஆகியோரின் குடும்பத்தினர் உடல்களை வாங்க வர முடியாது என்று தெரிவித்து விட்டனராம். செத்தால் சாகட்டும், நாங்கள் உடல்களை வாங்க வர முடியாது என்று அவர்கள் கூறி விட்டனராம்.
இதனால் உடல்களை பீகார் போலீஸாரிடம் ஒப்படைப்பது குறித்து சென்னை போலீஸார் ஆலோசனை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications