கேரளாவில் கப்பல் மோதி படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி: 3 பேர் மாயம்
ஆலப்புழை: கேரளாவில் நடுக்கடலில் கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் பலியானார்கள், 3 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 26ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் நங்கூரம் போடப்பட்டிருந்த படகின் மீது மோதியது. இதில் படகு கவிழ்ந்து அதில் இருந்த 7 பேரும் கடலுக்குள் விழுந்தனர். இதில் கொல்லத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜஸ்டின் (40), சேவியர் (42) என்ற 2 மீனவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
அப்போது அந்த வழியாக வந்த படகுகளில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 பேரைக் காப்பாற்றி தொட்டப்பள்ளி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த 2 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மீதமுள்ள 3 மீனவர்களைக் காணவில்லை. 4 கடற்படை கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படை படகுகளும், டோர்னியர் விமானம் ஒன்றும் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான மைக்கேல் கூறியதாவது,
அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. அந்த கப்பல் எங்கள் படகை இடித்தவுடன் நாங்கள் தூக்கி வீசப்பட்டோம். நான் கடலில் நீந்தியபோது சிறிது நேரம் சேவியர் என் கையைப் பிடித்திருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. அது இரவு நேரம் என்பதால் என்னால் கப்பலை பார்க்க முடியவில்லை. அது மிகப் பெரிய எண்ணெய் கப்பல் என்பது மற்றவர்கள் சொல்லித் தான் தெரியும். அவர்கள் எந்தவித சத்தமுமின்றி வந்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியதாவது,
கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் கடலில் விழுந்து காணாமல் போன 3 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அந்த சரக்கு கப்பலைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications