இங்கிலாந்தில் 44 ஆண்டுகளாக இயங்கி வந்த அணுமின் நிலையம் மூடல்
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 44 ஆண்டுகளாக மின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த உலகிலேயே மிகப் பழமையான அணுமின் நிலையம் நேற்று மூடப்பட்டது. அதை மூடி விட்டு அதற்கு அருகிலேயே புதிய அணுமின் நிலையம் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் மேற்கே உள்ள ஓல்டுபரி பகுதியில் கடந்த 1958ம் ஆண்டு அணுமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கியது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்து கடந்த 1960ம் ஆண்டு முதல் அணுமின் நிலையம் தனது பணியைத் துவங்கியது.
கடந்த 44 ஆண்டுகளாக இயங்கி வந்த ஓல்டுபரி அணுமின் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 435 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டோடு ஓல்டுபரி அணுமின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிவடைந்தது. ஆனால் அதன் ஆயுள் காலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் அணுமின் நிலையத்தின் ஆயுள் காலத்தை மேலும் அதிகரிக்க அதிக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனையடுத்து ஓல்டுபரி அணுமின் நிலையத்தின் உற்பத்தி நேற்று காலை 11 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த நிலையம் மூடப்பட்டது.
உலகில் இயங்கி வந்த அணுமின் நிலையங்களில் ஓல்டுபரி நிலையம் தான் பழமையானது. இந்த நிலையில் அதே பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அணுமின் நிலையம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வரும் 2025ம் ஆண்டு புதிய அணுமின் நிலையம் உற்பத்தியை துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications