அமெரிக்க சிறப்புப் படைகள் முகாமிடவில்லை: இந்தியா மறுப்பு
டெல்லி: இந்தியா உட்பட 5 தெற்காசிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் வில்லர்ட் கூறிய கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் பாதுகாப்பு அமைச்சகமும் இதனை நிராகரித்துள்ளன.
அமெரிக்காவின் கருத்து
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைக்காக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு ராணுவ தளபதி அட்மிரல் வில்லர்ட் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
சர்ச்சை
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு 5 தெற்காசிய நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் இந்தியாவில் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் என்ன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் அமெரிக்காவின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என்றும் அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தியா மறுப்பு
அமெரிக்காவின் இக்கருத்தை இந்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications