ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேர் பதவி பறிப்பு
ஐதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவான 17 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறித்து ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொறடா உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் 5-ந் தேதி தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 17 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
காங்கிரஸ் புகார்
இதனால் கொறடா' உத்தரவை மீறி, காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததற்காக 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவைத் தலைவர் என்.மனோகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு, பேரவைத் தலைவரின் ஆய்வில் இருந்து வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புகாரை ஏற்று, ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறித்து பேரவைத் தலைவர் மனோகர் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், பிரஜா ராஜ்யம் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரு எம்.எல்.ஏ. ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமாவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஜெகன்மோகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருடைய தந்தையும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கண்ட 17 எம்.எல்.ஏ.க்களும் கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தனர். அதை நேற்று பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதால், அந்த எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோனது.












Click it and Unblock the Notifications