8 மணிநேர மின்வெட்டால் கோபத்தின் உச்சியில் மக்கள் - வைகோ

சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைகுமாரை ஆதரித்து வைகோ தனது 2-ம் கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார். சங்கரன்கோவில் நகராட்சியின் 7 வார்டுகளில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
இந்த தொகுதியில் மக்களை சந்தித்த போது மின்சாரம் இல்லை, விசைத்தறிகள் ஓடவில்லை என அடுக்கடுக்கான புகார்கள் கூறுகின்றனர். இந்த தொகுதியில் 5 ஆயிரம் விசைத்தறிகளில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூலி உயர்வு கேட்டு இத்தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த அமைச்சரும் வரவில்லை.
இப்போது 32 அமைச்சர்கள் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சினையை ம.தி.மு.க. மட்டுமே தீர்க்க முடியும்.
தினமும் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை செய்யப்படுகிறது. இதனை சரிசெய்ய முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு மின்சாரம் இல்லை. மக்கள் கோபத்தின் உச்சியில் இருக்கிறார்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது. அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக ம.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழல் இல்லாத நேர்மையான அரசியலை உருவாக்க ம.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்," என்றார்.












Click it and Unblock the Notifications