புதிய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் பிக்ரம் சிங் நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இவர் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை இந்த பதவியில் நீடிப்பார்.
வி.கே.சிங் ஓய்வு
இந்திய ராணுவத்தில் மிக சக்தி வாய்ந்தது தரைப்படை. 13 லட்சம் பேரைக் கொண்ட இதன் தலைமை தளபதியாக ஜெனரல் வி.கே.சிங் இருந்து வருகிறார்.
வருகிற மே மாதம் 31-ந் தேதியுடன் இவரது பதவிக் காலம் முடிகிறது. ஆனால், தனது பிறந்த தேதி மே 10, 1951 என்றும், மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க தகுதி உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால், 1950-ம் வருடம் மே 10-ந் தேதியை கணக்கில் காட்டித்தான் அவர் பதவி உயர்வு பெற்றதாக அறிவித்த நீதிமன்றம் அவரது பதவி நீட்டிப்பு வழக்கை ரத்து செய்து
உத்தரவிட்டது.
புதிய தலைமை தளபதி
வி.கே.சிங்கின் வயது பிரச்சினை காரணமாக ராணுவ தலைமை தளபதியாக அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி ராணுவ வட்டாரத்தில் எழுந்தது. அதுபற்றி ராணுவ அமைச்சகமும் அறிவிக்காமல், அமைதி காத்து வந்தது.
தற்போது புதிய ராணுவ தலைமை தளபதியாக கிழக்கு பிராந்திய ராணுவ தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பிக்ரம் சிங் பதவி ஏற்பார் என்று ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் சிதான்ஷு கர் தெரிவித்தார்.
2014 மே வரை
லெப்டினென்ட் ஜெனரல் பிக்ரம் சிங் (வயது 59), ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு, ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போதைய தலைமை தளபதி வி.கே.சிங் வருகிற மே 10-ந் தேதி ஓய்வு பெற்றதும், பிற்பகலில் புதிய தலைமை தளபதியாக அவர் பதவி ஏற்பார். 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவர் தலைமை தளபதி பதவியில் இருப்பார்'' என்று அவர் கூறினார்.
வழக்கமாக புதிய தலைமை தளபதி நியமனம் 60 நாட்களுக்கு முன்னர்தான் அறிவிக்கப்படும். ஆனால், பிக்ரம் சிங் விஷயத்தில் 90 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications