உ.பியில் தகர்ந்தது மாயாவதி சாம்ராஜ்யம்- ஆட்சியைப் பிடிக்கிறார் முலாயம் சிங்!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. 5 மாநிலங்களிலும் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. பிற்பகலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்.
403 தொகுதிகள் உள்ள உத்தரபிரேதசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே தான் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி என்ன தான் தீவிர பிரச்சாரம் செய்திருந்தாலும் அவரது கட்சிக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாடி கட்சி தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தேர்தலையொட்டி உத்தர பிரதேசத்தில் உள்ள முதல்வர் மாயாவதியின் சிலைகள் மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகள் ஆகியவற்றை துணியைப் போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கோடி ரூபாய் செலவில் சிலைகளுக்கு திரையிடப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் திரைகள் அகற்றப்பட்டுள்ளது.
70 தொகுதிகள் உள்ள உத்தரகண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இங்கு பாஜகவே ஆட்சியை தக்க வைக்கிறது.
117 தொகுதிகள் உள்ள பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது.
மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறது.
40 தொகுதிகள் உள்ள கோவாவில் திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்கு பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications