ரயிலில் இருந்து தவறி விழுந்து தண்டவாளத்துக்கு நடுவே படுத்து உயிர் தப்பிய கல்லூரி மாணவர்
திருச்சி: திருச்சியி்ல் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் காயமின்றி உயிர் பிழைத்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் சக்திவிக்ரமன்(17). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
வார விடுமுறையையொட்டி ஊருக்கு சென்றிருந்த அவர் நேற்று திருச்சி திரும்புவதற்காக மதுரை-விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்தார். நேற்று அதிகாலையில் ரயில் திருச்சியை வந்தடைந்தது. ஆனால் ரயிலில் அசந்து தூங்கிய சக்திவிக்ரமன் திருச்சி ஜங்ஷனில் இறங்கவில்லை.
ரயில் புறப்பட்டு பொன்மலை ரயில் நிலையத்தில் வந்து நின்றபோது தான் அவர் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தார். அதற்குள் ரயில் புறப்பட ஆரம்பித்ததால் உடனடியாக ரயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்து இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே விழுந்தார்.
ஆனால் அதிஷ்டவசமாக ரயிலின் சக்கரத்தில் சிக்காமல், ரயில் அடியில் சென்றார். அங்கு ரயில் பெட்டிகள் தன்னை கடந்து செல்லும் வரை படுத்திருந்தார். ரயில் சென்ற பிறகு தவறி விழுந்த வாலிபரின் நிலையை அறிய பிளாட்பாரத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர்.
அதற்குள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த சக்தி விக்ரமன் காயங்கள் எதுவுமின்றி எழுந்து வந்தார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்தும், காயம் எதுவும் இல்லாமல் அவர் உயிர் தப்பியதை கண்டவர்கள் வியந்து மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications