ஜி.கே.வாசன் தங்கையின் பையை தவறுதலாக எடுத்துச் சென்ற திமுக எம்.பியின் மனைவி!
சென்னை: மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தங்கை ஸ்வேதா கொண்டு வந்திருந்த பையை தவறுதலாக, திமுக எம்.பி. விஜயனின் மனைவி எடுத்துச் சென்றதால் சுவாரஸ்யமான குழப்பம் ஏற்பட்டு விட்டது.
இவர்கள் ரயிலில் அருகருகே அமர்ந்தபடிதான் பயணம் செய்துள்ளனர். ஆனால் ஒருவருக்கு மற்றவர் யார் என்ற அடையாளம் தெரியாமல் போய் விட்டது.
நாகை மாவட்ட திமுக செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை புறப்பட்டார்.
அதே பெட்டியில், அவர்களுக்கு அருகே இன்னொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார். அவரது பெயர் ஸ்வேதா. இவர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தங்கை ஆவார்.
நேற்று காலை 6 மணியளவில் சென்னை மாம்பலம் வந்ததும் விஜயனும், அவரது மனைவியும் இறங்கினர். பின்னர் வீடு போய்ச் சேர்ந்தபோதுதான் தாங்கள் கொண்டு வந்திருந்தவற்றுடன் கூடுதலாக ஒரு பையும் வந்திருந்ததை அறிந்தனர்.
இதையடுத்து, தனது உதவியாளருடன் மீண்டும் மாம்பலம் ரயில் நிலையம் சென்ற விஜயன், அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சந்திரசேகரனிடம், தவறுதலாக எடுத்துச் சென்று விட்டோம்; தயவுசெய்து யாருடையது என்று விசாரித்து ஒப்படைத்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து காவலர் சந்திரசேகர், ரயில் நிலைய அதிகாரி பிரவீனிடம் பையை ஒப்படைத்து விவரத்தைச் சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் அதே பெட்டியில் பயணித்த ஸ்வேதா, தனது வீடு போய்ச் சேர்ந்ததும் தான் கொண்டு வந்திருந்த ஒரு பை குறைவதைப் பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக மாம்பலத்தில் இறங்கிய யாராவது தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு மாம்பலம் ரயில் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுதான் தனது பை அங்கு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனது உதவியாளரை அனுப்பி பையை வாங்கி வரச் சொன்னார். பையில் எல்லாப் பொருட்களும் சரியாக இருப்பதாகவும், பையை பத்திரமாக வைத்திருந்ததற்கு நன்றி என்றும் ரயில்நிலைய மேலாளருக்குத் தெரிவித்தார்.
இரண்டு விஐபி குடும்பத்தார் அருகருகே பயணம் செய்தும் தாங்கள் யார் என்பதை தெரிவித்துக் கொள்ளாமல் அமைதியான முறையில் பயணம் செய்தது அனைவரையும் வியப்படைய வைத்தது.












Click it and Unblock the Notifications