அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?: அறிவிக்கப்படாததால் நீடிக்கும் சஸ்பென்ஸ்!

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் பகல் 12 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்ச உணர்வு மற்றும் எண்ணங்கள் குறித்து ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, அரசுக்கு அளித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் பற்றியும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் அளித்த அறிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இந்த நிமிடம் வரை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
கூடங்குளம் குறித்தும், மின்தடை குறித்தும்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மின்தடையால் அரசுக்குப் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிட்ம் முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பான குரலில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் மின் நிலையம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் சங்கரன்கோவில் தேர்தல் முடிந்த பின்னரே அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டாசு வெடிக்க காத்திருந்த திமுகவினர்
முன்னதாக அமைச்சரவையின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அதைக் 'கொண்டாடுவதற்காக' கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிக்குளம் பகுதியில் திமுகவினர் இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் முடிவை அறிந்து அதற்கேற்ப அதை கொண்டாடும் வகையில் இனிப்புகள், பட்டாசுகளுடன் இவர்கள் காத்திதருந்தனராம். இருப்பினும் அரசின் முடிவு எது என்று வெளியாகாததால் ஏமாற்றமடைந்து இவர்கள் அமைதியாகி விட்டனராம்.












Click it and Unblock the Notifications