உ.பி, கோவா தேர்தல் தோல்வி- காங்கிரசில் உட்கட்சி மோதல் தீவிரமடைகிறது
டெல்லி: உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. தேர்தல் தோல்விக்கு தங்களது கட்சியினரே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம்
உ.பி. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தாமே பொறுப்பேற்பதாக ராகுல்காந்தியும், தோல்வியிலிருந்து பாடம் கற்கிறோம் என்று சோனியாவும் பெருமிதம் பொங்க குறிப்பிட்டுக் கொண்டாலும் காங்கிரஸின் பாரம்பரிய குடுமிபிடிச் சண்டை வீதிக்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியும் சரி அமேதி தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் சரி தாம் பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை என்று கொளுத்திப் போட்டார்.
மேலும் தமது மனைவி அமீதா சிங், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரிடம் தோற்றுப் போகவும் கட்சியினரே காரணம் என்றார்.
இதற்குப் பதிலளித்துள்ள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி, கட்சித் தோல்விக்கு அனைவருமே பொறுப்பேற்கவேண்டுமே தவிர ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர்தலைவர்கள் பலரும் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்றும் ரீட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல் உத்தரப்பிரதேச தேர்தல் தோல்வி தொடர்பாக டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இச்சந்திப்பின் போது தமது ராஜினாமா குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவா
கோவாவில் தாம் தோற்றுப்போக முதலமைச்சர் திகம்பர் கமத்தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் அலிமோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், முதல்வர் கமத் எனக்கு எதிரானவர். நான் தோற்றுப்போனதற்கு அவரும் ஒரு காரணம்" என்று பகிரங்கமாக சாடியுள்ளார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறும் கத்தோலிக்க பாதிரியார்களின் பிரச்சாரமும் தம்மை தோற்கடிக்க வைத்துவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கோவா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுதாகரர் ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications