பெண் அமைச்சரின் மேக்கப் குறித்து விமர்சனம்-சிபிஐ செயலாளர் பேச்சுக்கு ஆந்திர அமைச்சர்கள் கண்டனம்
ஹைதராபாத்: ஆந்திர அமைச்சர் கீதாரெட்டியை மோசமாக விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் நாராயணாவுக்கு அம்மாநில அமைச்சர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர தொழில் துறை அமைச்சராக இருப்பவர் கீதாரெட்டி. இவரை பற்றி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாராயணா கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசும்போது, மந்திரி கீதாரெட்டிக்கு தன்னை அலங்காரம் செய்யவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி இவரால் தனது துறையை நன்றாக கவனிக்க முடியும்? என்றார்.
நாராயணாவின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பால்ராஜு, கொன்னுமுராரி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்டு தலைவர் நாராயணா, தலித் இனத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதாரெட்டியை மிகவும் அவதூறாக பேசியுள்ளார். அவர் தனது நாவை அடக்கிக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அவரது நாக்கை அறுப்போம். விமர்சனம் செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு. நாராயணாவுக்கு ஆளும் கட்சியை விமர்னம் செய்வதே வாடிக்கையாகி விட்டது என்றனர்.
நாராயணா மீது ஐதராபாத் போலீசார் தீண்டாமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாராயணா வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் கலைந்து போகும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இருப்பினும் கீதாரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நாராயணா, தமது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications