ஸ்டாலினின் பிரச்சாரப் பாதை மாற்றம்: வைகோவின் சொந்த ஊரில் பிரச்சாரத்தை முடிக்கிறார்

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து ஸ்டாலின் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். சங்கரன்கோவில் தெற்கு ரத வீதி தேரடி திடலில் பிரச்சாரத்தை துவக்கும் அவர் மேலநீலித நல்லூர், குருவிக்குளம் ஒன்றியங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
14ம் தேதி இரவு திருவேங்கடத்தில் அவர் பிரச்சாரத்தை நிறைவு செய்வதாக இருந்தது. ஆனால், திடீரென ஸ்டாலினின் பிரச்சாரத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. திருவேங்கடத்திற்கு பதிலாக வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஸ்டாலின் பிரச்சாரம் நிறைவடைவது போல பிரச்சாரப் பயணத்தின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக கலிங்கப்பட்டியில் உள்ள தனது பூர்வீக வீட்டிலேயே தங்கியிருக்கும் வைகோ அங்கிருந்து தான் தினமும் பிரச்சாரத்துக்கு வந்து செல்கிறார். இதையடுத்து மதிமுகவை எதிர்த்து அதிமுகவினர் கலிங்கப்பட்டி பகுதியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந் நிலையில் திமுகவும் வைகோவைக் குறி வைத்து கலிங்கப்பட்டிக்கு ஸ்டாலினை அனுப்புவது குறிப்பிடத்தக்கது.
காமராஜரா எம்ஜிஆரா?-நெப்போலியன் கேள்வி:
இந் நிலையில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மத்திய இணையமைச்சர் நெப்போலியன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார்.
அவர் பேசுகையில், நான் இங்கு வந்தவுடன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு என்னை பேச வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.
காமராஜர் முதன் முதலில் 55,000 பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கலைஞர் சொன்னபோது அதை மறுத்தவர் ஜெயலலிதா. மாறாக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். என்று கூறியவர். எனவே காமராஜரின் சொந்தங்களாகிய நீங்கள், வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
பிரச்சாரத்தின்போது மின் தடையை கண்டித்து அவர் பாட்டும் பாடினார்.












Click it and Unblock the Notifications