பரிதி இளம்வழுதி வீட்டில் ரெய்டு-7 கிலோ வெள்ளி, பணம், 320 கிராம் நகை பறிமுதல்

கடந்த திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த பலரும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனைக்குள்ளாகி வருகின்றனர். மூத்த அமைச்சர்கள் முதல் ஜூனியர் அமைச்சர்கள் வரை பலரும் ரெய்டுக்குள்ளாகி, பலர் கைதாகி சிறைக்கும் போய் விட்டு வந்துள்ளனர். சிலர் சிறையிலும் உள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது பரிதி இளம்வழுதியும் சோதனைக்குள்ளாகியுள்ளார். திமுக தலைமையுடன் சமீப காலமாக மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார் பரிதி. திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் திமுகவிலேயே அவரை ஓரம் கட்டி வைத்துள்ளனர். அவரும் திமுகவை விட்டு வெளியேறாமல் இருக்கிறார். இடையில் அவர் அதிமுகவுக்குப் போகப் போவதாகவும் பேச்சுக்கள் வந்தன.
இந்த நிலையில் பரிதி வீட்டில் ரெய்டு வந்து விட்டார்கள். அவருக்கு சொந்தமான சாந்தோம், ராயப்பேட்டை, பாலவாக்கம் உட்பட 5 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் சோதனை நடந்தது. . வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் ஒரு பகுதியாக பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து பரிதி இளம்வழுதியிடம் 3 டிஎஸ்பிக்கள் கொண்ட ஒரு குழு தீவிரமாக விசாரித்தனர். இதனால் அவர் கைது செய்யப்படுவாரோ என்ற பரபரப்பும் ஏற்பட்டது.
பாலவாக்கம் வீட்டில் மட்டும் 10க்கும மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் இறுதியில், கணக்கில் வராத 320 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 8.36 லட்சமாகும்.
மேலும், 7 கிலோ வெள்ளி, ரூ. ஒன்றரை லட்சம் பணமும் சிக்கியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications