ஏடிஜிபி ஜார்ஜைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸும் கூடங்குளத்தில் ஆய்வு
நாகர்கோவில்: கூடுதல் டிஜிபி ஜார்ஜைத் தொடர்ந்து தற்போது தென் மண்டல காவல்துறை ஐஜி ராஜேஷ் தாஸும், கூடங்குளத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் நிலை மாறி விட்டதாக கூறப்படுகிறது. இது நாள் வரை உதயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவுக்கு தமிழக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இனியன் குழு அறிக்கை தாக்கலுக்குப் பின்னர் நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் திடீரென கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்தார். கடலோரப் பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அணு மின் நிலையப் பாதுகாப்பு, போராட்டம் நடைபெறும் பகுதிகள், கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார். உயர் போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் ஆய்வு நடத்தினார். இது பல்வேறு யூகங்களை எழுப்பியது. உதயக்குமார் கைது செய்யப்படப் போகிறார், போராட்டம் ஒடுக்கப்படவுள்ளதாக சந்தேகங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று திடீரென தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜுலு ஆகியோர் நாகர்கோவில் வருகை தந்தனர். பின்னர் கடலோர கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இன்றும் காலையும் குமரி முதல் கூடங்குளம் வரையிலும் கடலோர பகுதிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் குமரி மாவட்டம் மண்டைக்காடு சென்ற அவர்கள், அங்கு பகவதி அம்மன் கோவில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஏடிஜிபி ஜார்ஜும், ஐஜி ராஜேஷ் தாஸும் சேர்ந்துதான் தேனி மாவட்டத்தில் வெடித்துக் கிளம்பிய முல்லைப் பெரியாறு அணை போராட்டத்தை 'முடித்து' வைத்தவர்கள் என்பதால், கூடங்குளத்திற்கு இவர்கள் அடுத்தடுத்து வந்து போயுள்ளதால் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications