பிரச்சாரத்தி்ன்போது மனுக்கள் பெறும் அமைச்சர்கள்: செய்வதறியாது தவிக்கும் அதிகாரிகள்
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தை வீதிமுறைகளை மீறி பிரச்சாரத்திற்கு போகும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மனுக்களை பெறுவதுடன் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சங்கரன்கோவில் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களுக்கு செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய பகுதி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும்போது கூடவே அரசின் நலத்திட்ட உதவிகளான முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெறுகின்றனர். இது தேர்தல் வீதிமுறைகளை மீறும் செயலாகும். மேலும் இந்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து உடனடியாக நிறைவேற்றுமாறு தடாலடியாக அவர்கள உத்தரவிடுவதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதால் இருதலைக் கொள்ளி எரும்பாக அதிகாரிகள் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications