அடிசத்சுச் சொல்றேன், என் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ கூட அதிமுகவுக்கு போக மாட்டார்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
கோவை: என் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூட அங்கு போக மாட்டார்கள். அடித்து சொல்கிறேன். பேசிப் பார்த்தார்கள். படியவில்லை. உங்களுக்காக வேலை செய்த போதே எங்களை மதிக்கவில்லை. இப்போதுதானா மதிக்க போகிறீர்கள் என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறி விட்டனர்.

கோவை அருகே சூலூரில் நடந்த கட்சித் திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பஸ் கட்டணத்தை ஏன் உயர்த்துகிறீர்கள்? என்று கேட்டதற்கு தான் சங்கரன் கோவிலில் தைரியம் இருந்தால் தனியாக நின்று பாருங்கள் என்று சவால் விட்டனர். நான் கேட்டது மக்கள் பிரச்சினை. ஆனால் அவர்கள் சொன்னது தொகுதி பிரச்சினை. மக்கள் பிரச்சினைக்கு பதில் சொல்லுங்கள் என்று தான் அன்று கேட்டேன்.

அதற்கு விஜயகாந்த் சஸ்பெண்ட். பட்ஜெட்டில் பேசக்கூடாது என்று கூறினார்கள். நான் பேசவில்லை. நான் இதோ இருக்கிற மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். என்னை நீங்கள் கையை கட்டி, வாயை பொத்தி மூலையில் தூக்கிப் போட்டால் விஜயகாந்த் சும்மா இருப்பானா?. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது.

கூடங்குளத்துக்கு நான் அரசியல் செய்ய செல்லவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக தான் செல்கிறேன். அரசியல் செய்யும் களம் வேறு. நான் சென்று விட்டேன் என்பதற்காக கூடங்குளம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார்கள். ஆனால் இப்போது அணு உலையை ஆய்வு செய்ய குழு அமைக்கிறார்கள். ஏன் இப்படி மக்களை குழப்புகிறீர்கள்?. சட்டசபையில் மக்கள் குறைகளை தான் பேச முடியும்.

சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. முதல்-அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஒரு தொகுதிக்கு 32 அமைச்சர்கள் ஏன் வேலை பார்க்கிறார்கள்.

வட இந்தியாவில் பாடம் புகட்டியதை போன்று இங்கும் பாடம் புகட்ட வேண்டும். உங்களுக்கு தெரியும் உத்தரபிரதேச தேர்தலில் என்னவெல்லாமோ சொன்னார்கள். ஆனால் மக்கள் மவுனமாக வந்து வாக்களித்தனர். நிலைமையே அங்கு மாறி விட்டது. அந்த மாதிரி இங்கும் சத்தமில்லாமல் வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தெரியக்கூடாது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.

விலைவாசியெல்லாம் ஏன் கூடிப்போச்சு. விவசாயிகளுக்கு கரண்ட் இல்லை. அது வரும் போது வரும் என்று பதில் அளிக்கிறார்கள். பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். சந்தோஷம். படிக்கும்போது கரண்ட் வருமா? என்றால் வராது. படித்தால் தானே பரீட்சை எழுத முடியும். படிப்பதற்கு கரண்ட் கொடுக்காமல் பரீட்சை எழுதுவதற்கு மட்டும் கரண்ட் கொடுக்கிறார்களாம். படிக்கும் போது கரண்ட் கொடு என்று தான் கேட்கிறேன். மாலை 6 மணிக்கு மேல் கரண்ட் கொடுத்தால் தானே பரீட்சைக்கு படிக்க முடியும்.

விஜயகாந்த் சங்கரன்கோவில் தொகுதிக்கு சென்றால், 10 போஸ்டர் அடித்தால் அந்த செலவை அங்குள்ள வேட்பாளர் கணக்கில் எழுதுகிறீர்கள். இதை கேட்டால் தேர்தல் கமிஷனுக்கு அதிக பவர் என்று சொல்கிறார்கள். என்ன பவர்? இது தானா பவர்? 100 பேனர் தான் வைக்க வேண்டும். அதற்கு மேல் வைக்க கூடாது என்று சொல்கிறார்களே. இது தானா பவர். எத்தனை பேனர் வைத்தால் என்ன? காலையில் வைத்தால். மாலையில் எடுத்துவிடப் போகிறார்கள்.

போலீசார் தங்கள் கடமையை மறந்து செயல்படுகிறார்கள். நாட்டில் எவ்வளவோ திருட்டு நடக்கிறது. அதை போய் பிடியுங்கள். இங்கு விஜயகாந்துக்கு பேனர் வைத்தால் அதை வைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். திருப்பூரில் ஒரு நகை கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருட்டு போய் விட்டது. அதை பிடித்தார்களா?. பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. ஏனென்றால் சங்கிலியை பறித்து விடுகிறார்கள். காவல் துறையினர் இவற்றை கவனிப்பதில்லை. ஆனால் என்னுடைய பேனர் வைப்பதற்கு மட்டும் போலீசார் தடை போடுகிறார்கள்.

யார் ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்று பாருங்கள். திருப்பூரை சேர்ந்த என் கட்சிக்காரர் ஒருவர் முன்பு மாதத்துக்கு 9 லட்சம் ரூபாய் கரண்ட் பில் கட்டினார். ஆனால் இப்போது இரண்டரை லட்சம் ரூபாய்க்கு தான் கரண்ட் பில் கட்டுகிறார்.

நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று எப்போதுமே விரும்பியதில்லை. மக்களாக பார்த்து அளித்த பதவி அது. அன்று நான் ஒரு எம்.எல்.ஏ. இன்றும் ஒரு எம்.எல்.ஏ.

என் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூட அங்கு போக மாட்டார்கள். அடித்து சொல்கிறேன். பேசிப் பார்த்தார்கள். படியவில்லை. உங்களுக்காக வேலை செய்த போதே எங்களை மதிக்கவில்லை. இப்போதுதானா மதிக்க போகிறீர்கள் என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறி விட்டனர்.

என் தொகுதியான ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஒருவருக்கு பட்டா கேட்டு கடிதம் எழுதினால், நீங்கள் 10 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளீர்கள் என்று பதில் கடிதம் வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் வாதாடுவதற்காக டெல்லியில் இருந்து வக்கீல் வருகிறார்கள். மக்களாகிய நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ. பதவியையே செல்லாது என்று இவர்கள் எப்படி சொல்லலாம். அவர்களால் ஒன்றே ஒன்றை மட்டும் செய்ய முடியாது. கட்சித் தலைவர் பதவியிலிருந்து மட்டும் என்னை எடுக்கவே முடியாது. அந்த பதவியிலிருந்து தான் உங்களிடையே பேசுகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+