ஏ.எடி.எம்மை தகர்த்து கொள்ளையடிக்க சதி: ஊத்தரங்கரை வெடிகுண்டு சம்பவம் பற்றி புதிய தகவல்கள்
ஊத்தங்கரை: ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ராணுவ வீரர் தனது நண்பர்களுடன் வெடிகுண்டை எடுத்துச்சென்ற போது, தவறுதலாக ரிமோட் கண்ட்ரோலில் கைபட்டு குண்டு வெடித்ததால் ராணுவ வீரர் பலியானதாக விசாரணையில் தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலையில் கடந்த 5-ந் தேதி ஒரு டீ கடை அருகே குண்டு வெடித்ததில் படத்தான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சீனிவாசன் (வயது 24) தலைதுண்டித்து பலியானார்.
அவருடன் வந்த நண்பர் ராமமூர்த்தி படுகாயம் அடைந்து தப்பி ஓடினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மத்தூர் அருகே பதுங்கி இருந்த போது போலீசில் சிக்கினார்.
வாக்குமூலம்
ராமமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
நான் ரேடியோ மெக்கானிக்காக இருந்து வருகிறேன். சீனிவாசன் ராணுவத்தில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு வந்தார். அவருக்கு ராணுவத்தில் உள்ள வெடிகுண்டு தயாரிப்பு அனுபவம் மற்றும் எனது மெக்கானிக் அனுபவத்தை கொண்டு இருவரும் ரிமோட் வெடிகுண்டை தயாரித்து ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம். எங்களுடன் நண்பர்கள் விஜயன் (22), சக்திவேல் (23) ஆகியோரும் இணைந்தனர்.
இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட சீனிவாசன் வீட்டில் வைத்து தான் இந்த வெடிகுண்டை தயாரித்தோம். அதை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று சோதனை செய்து வெடிக்கவைத்தோம். அப்போது அது நன்றாக வெடித்தது.
ஊத்தங்கரையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டு அங்கு சீனிவாசனும், நானும் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அப்போது அங்குள்ள மெஷினில் பணம் இல்லை. உடனே வங்கிக்கு போன் செய்து ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்று கூறினோம். அவர்கள் இரவு 7 மணிக்கு தான் பணம் லோடு செய்யப்படும் என்றனர். எனவே பணம் லோடு செய்யும் வரை அங்கேயே இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.
அப்போது அருகில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு காத்திருக்க முடிவுசெய்தோம். எங்களது திட்டப்படி விஜயனும், சக்திவேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஊத்தங்கரை யூனியன் அலுவலகம் அருகே காத்திருந்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவம்
சீனிவாசன் ரிமோட் குண்டுகள் இருந்த ஜோல்னா பையை தோளில் மாட்டி வைத்திருந்தார். என்னிடம் குண்டுகளை வெடிக்க வைக்கும் ரிமோட் இருந்தது. அப்போது எனது செல்போன் அடித்தது. அதனை எடுக்க நான் முயன்றேன். அப்போது தவறுதலாக ரிமோட் பட்டன் மீது கைபட்டதால் அது இயங்கி வெடித்தது. இதில் சீனிவாசன் தலைதுண்டித்து பலியானார். எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ராமமூர்த்தி, விஜயன், சக்திவேல் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வங்கி கொள்ளைக்காக ராணுவத்தை விட்டு ஓடி வந்த சீனிவாசன் குண்டு வெடிப்புக்கு பலியாகி உள்ளதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.












Click it and Unblock the Notifications