முதல்வருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தால் குடும்பத்தோடு சாக தயார் - நடராஜன்
தஞ்சை: சொத்து குவிப்பு வழக்கில் எங்களின் மீது முதல்வருக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், குடும்பத்தோடு விஷம் கொடுத்து எங்களைக் கொன்றுவிடலாம் என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரில், நடராஜன் மீதும் நடராஜன் டிரைவர் பிரபு, அவருடைய மாமா சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு நடராஜனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் ஜெஎம் 2 நீதிமன்ற நீதிபதி முருகனிடம், நடராஜனை போலீசார் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு நீதிமன்றத்தில் இருந்து போலீசாரால் வெளியே கொண்டு வரப்பட்ட நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. நான் சிறையில் இருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்த நன்மையும் இல்லை. கேடு தான் வரும். உயர்நீதிமன்றத்தில் எனக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால், அந்த ஆத்திரத்தில் தற்போது இன்னொரு பொய் வழக்கை போலீசார் போட்டுள்ளனர்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவுக்கு சம்மந்தம் இல்லை. அதற்கு நான் தான் பொறுப்பு என்று எனது மனைவி சசிகலா அனைத்து சுமைகளையும் ஏற்று கொண்டார்.
முதல்வருக்கு சந்தேகமிருந்தால் சென்னை அண்ணாநகர் ரமேஷ் (தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நெருங்கிய நண்பர்) போல, எங்களையும் குடும்பத்துடன் விஷம் வைத்து கொன்று விடட்டும். அந்த விஷத்தை குடித்துவிட்டு நாங்கள் சாகத் தயாராக இருக்கிறோம்.
பெங்களூரு நீதிமன்ற வழக்கில் எனது மனைவி சசிகலா, ஹனுமான் போல நெஞ்சை பிளந்து காட்டிவிட்டார். எனவே எங்கள் மீது முதல்வருக்கு சந்தேகமோ, பயமோ தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications