காரில் பணத்துடன் பிடிபட்ட அதிமுக பெண் மாஜி அமைச்சர்-நைசாக நடந்தே தப்பினார்!

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க நாலாபுறமும் 6 இடங்களில் சோதனைச் சாவடிகளைப் போட்டு கார்கள், வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 40 லட்சம் வரை பணம் சிக்கியுள்ளது. இது போக ஏராளமான பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு, சங்கரன்கோவில் புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை துணை தாசில்தார் உமா மகேஷ்வரி மற்றும் போலீர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்ததில், அதில் ரூ.53 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், சங்கரன்கோவில் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராபின்சன் நடத்திய விசாரணையில், அந்த கார் புவனகிரி அதிமுக எம்எல்ஏ செல்வி ராமஜெயத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
என்ன காமெடி என்றால், காரை நிறுத்திப் போலீஸார் சோதனை போட்டுக் கொண்டிருந்தபோது காரில் இருந்த செல்வி ராமஜெயம், காரை விட்டு இறங்கி விடுவிடுவென நடந்து போய் விட்டார். அவரைப் பிடிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
செல்வி ராமஜெயம் அமைச்சராக இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications