தமிழகத்திற்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் கேட்டு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மத்திய பொதுத்துறை நிறுவனங்களான பாய்லர் தொழிற்சாலை நிறுவனம் (பெல்), நெய்வேலி அனல்மின் நிறுவனம், தேசிய நீர்மின் கழகம் போன்றவை செயல்படுத்த வேண்டிய மின் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்படாமல் தாமதப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமாளிக்க பிற மாநிலங்களில் இருந்து விலைக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது.
சில மாநிலங்களில் இருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஆனால் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் தொடர் பாதைகள்' கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு மின்சாரத்தை கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் 203 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்கு கொண்டு வர முடியும். உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 727 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தமானது. ஆனால் தேசிய நீர்மின் கழகம் இதை கிடைக்கவிடாமல் தடுக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1,750 மெகாவாட் மின்சாரம் பெற தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் மின் தொடர் பாதை' வழியாக 350 மெகாவாட் மின்சாரமே கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் என்று மத்திய அரசின் மின் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவரிக்க முடியாத சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான மின்வெட்டு பிரச்சினைக்கு மின் தொடர் பாதைகள்' கிடைக்காததே காரணம் ஆகும். மின் தொடர் பாதைகள்' பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இப்பாதையை நிர்வகிக்கும் ஆணையத்துக்கு பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இது மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி இந்த ஆணையத்துக்கே பல சமயங்களில் பிரச்சினையாகி இருக்கின்றது.
எனவே, இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு தேவையான 1000 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவர மின் தொடர் பாதைகள்' பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று 14.6.2011 அன்று தங்களிடம் நேரில் மனு அளித்தேன்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் மின் உற்பத்தியை தொடங்கும் வரை ஒரு வருடத்துக்கு கூடுதல் மின்சாரம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதில் சமீபத்தில் தமிழகத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தமிழகத்தில் நிலவும் அதீத மின்பற்றாக்குறையை சமாளிக்க பயன்படாது.
எனவே, நான் ஏற்கனவே தங்களிடம் கேட்டுக் கொண்டபடி தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவிலேயே 1000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்க தாங்கள் தலையிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications