வருவாயைப் பெருக்க வழி காட்டிய போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இடமாற்றம்!

சமீபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டது அரசு. இதை நியாயப்படுத்தி முதல்வர் ஜெயலலிதாவும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் மக்கள்தான் இந்த கட்டண உயர்வை ஜீரணிக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். பலர் பஸ்களில் ஏறுவதையே விட்டு விட்டனர். ஏராளமான பேர் ரயில்களுக்கு மாறி விட்டனர். அரசுப் பேருந்தில் ஒரு முறை போகும் கட்டணத்தில் ரயிலில் ஊருக்குப் போய் திரும்பி வந்து விடலாம் என்ற அளவுக்கு ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால், மக்கள் இப்போது ரயில்களுக்கு அலை மோதுகின்றனர். இதனால் அரசுப் பேருந்துகளில் குறிப்பாக விரைவுப் பேருந்துகளில் கூட்டமே இல்லை, காற்று வாங்குகிறது, ஈயோட்டி வருகிறார்கள்.
குறிப்பாக பகல் நேர அரசு விரைவுப் பேருந்துகளில் கூட்டமே இல்லை. டிரைவர், கண்டக்டர், சொற்ப பயணிகளைத் தவிர பஸ்களில் யாருமே இல்லை. இதனால் அரசு எதிர்பார்த்த வருமானம் வரவில்லை. மாறாக, வந்த வருமானமும் குறைந்து போய் விட்டது. இதையடுத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின், கட் டிக்கெட் கட்டணத்த, ஒரு கிலோமீட்டருக்கு 70 பைசா என்பதிலிருந்து 56 பைசாவாக குறைத்தனர். இதனால் கட்டணம் குறைந்தது. இதையடுத்து பயணிகளும் அடடா, கட்டணம் குறைந்து விட்டதே என்று ஆர்வத்துடன் அரசுப் பேருந்துகளுக்கு வர ஆரம்பித்தனர். இதனால் அரசுப் பேருந்துகளில் மறுபடியும் கூட்டம் சேர ஆரம்பித்தது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நடைமுறைப்படுத்திய இந்த கட்டண உயர்வுக்கு, பிற அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அதிருப்தி தெரிவித்தனவாம். நீங்க பாட்டுக்கு குறைச்சிட்டீங்க, எங்களுக்கு அடியாகுதே என்று அவர்கள் புலம்பினார்களாம். மேலும், குறைத்தால் எல்லோருக்கும் குறையுங்கள், அது என்ன விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மட்டும் குறைப்பது என்றும் குமுறினராம்.
மேலும் மக்கள் மத்தியிலும், அடுத்து அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் குறைக்கப்படுமோ என்ற ஆர்வம் எழுந்தது. இதனால் அரசுக்கு திண்டாட்டமாகி விட்டது. இதையடுத்து இந்த கட்டணக் குறைப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மணியை தூக்கியடித்து விட்டனர். அவரை தற்போது பெருந்துறையில் உள்ள போக்குவரத்துக் கழக மருத்துவக் கல்லூரி நிர்வாக அதிகாரியாக மாற்றி விட்டனர். அந்தப் பொறுப்பில் இருந்த மோகனை நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளனர்.
உண்மையில் இந்தக் கட்டணக் குறைப்பானது அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் நல்ல உத்தியே என்பது பலரின் கருத்தாகும். இதைப் புரிந்து கொள்ளாமல், மணியை இடமாற்றம் செய்தது சிலரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications