தமிழக மேல்சபை ரத்து மசோதா - விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் மேல்சபை அமைவதை ரத்து செய்வதற்கான சட்ட திருத்த மசோதா அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
1986-ல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மேல்சபை ரத்து செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியின்போது மீண்டும் மேல்சபை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 2010 மே மாதம் 4-ந்தேதி கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டில் மீண்டும் மேல்சபை அமைக்கும் மசோதா நிறை வேற்றப்பட்டது.
கடந்த ஆண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு மேல்சபை தேவை இல்லை என்று கடந்த மே மாதம் 24-ந்தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் நகலை, நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமார், மாநிலங்களவைத் தலைவரும் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி ஆகியோரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கொடுத்தனர்.
என்றாலும், குளிர்காலக் கூட்டத் தொடரின் போது தமிழ்நாட்டில் மேல்சபை அமைப்பதை ரத்து செய்யும் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. ஆனால் இந்த முறை நாடாளுமன்றம் கூடும்போது, தமிழ்நாட்டில் மேல்சபை அமைப்பதற்காக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்ப பெறுவதற்கான மசோதா கொண்டு வரப்படுகிறது.
மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்து விட்டது. தமிழ்நாட்டில் மேல்சபை அமைக்கும் சட்டத்தை திரும்ப பெறும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற நிதிநிலைக் கூட்டத் தொடரின்போது, தாக்கல் செய்யப்படும். அடுத்த வாரம் இதை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications