பாளை சித்தா மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு உடனே திறக்க வலியுறுத்தல்
மதுரை: பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை விரைவில் திறக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி முதலாம் ஆண்டு இளநிலை மற்றும் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது.
இக்குறைபாடுகளை தமிழக அரசு சரி செய்த பிறகும் கல்லூரியை மீண்டும் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க கவுன்சில் மறுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மருத்துவப் படிப்பிற்கான அங்கீகாரத்தை மீண்டும் வழங்கக் கோரி ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அங்கீகாரம் வழங்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். அதன் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது முறையல்ல.
எனவே, மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி இக்கல்லூரிக்கான அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications