பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு மீது தெலுங்கானா கட்சியினர் செருப்பு வீச்சு
நிசாமாபாத்: இடைத்தேர்தலை முன்னிட்டு நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பரிடுபேட் கிராமத்தில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் செருப்புகளை வீசினர். மேலும் அவரது வேன் மீது கற்களை வீசினர்.
ஆந்திர மாநிலத்தில் வரும் 18ம் தேதி 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் கோவூரில் மட்டும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் அது போட்டியிடவில்லை. ஆனால் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 7 தொகுதிகளிலும் களத்தில் உள்ளன. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று தெலுங்கானா பகுதி நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பரிதுபேட் கிராமத்தில் தனது கட்சி வேட்பாளர் நிட்டு வேணுகோபால் ரெட்டியை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்ர். ஆனால் அவரை அங்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என்று கூறி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொண்டர்கள் அவரது வேனை முற்றுகையிட்டனர். இருப்பினும் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சந்திரபாபு நாயுடு மீது செருப்புகளை வீசினார்கள். அவை அவரது வேனில் பட்டு கீழே விழுந்தன. மேலும் சிலர் நாயுடுவின் வேன் மீது கற்கள் வீசித் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர் மீது செருப்புகளை வீசியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications