அமெரிக்கத் தீர்மானம் நியாயமற்றது: அலறும் கோத்தபய
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்றிருப்பதாகக் கருதப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் ஆதாரமற்றதும் நியாயமற்றதும் ஆகும் என்று இலங்கை கூறியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் அந்நாட்டுப் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ச கூறியதாவது:
இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற, நியாயமற்ற வகையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சர்வதேச சமூகம் வைத்திருக்கிறது.
ஆனால், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களான தமிழ்ச்செல்வன், சூசை ஆகியோரின் குடும்பங்களை இலங்கை ராணுவம்தான் பாதுகாத்து வருகிறது. அவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரைக்கூட நாங்கள்தான் பராமரித்தோம் என்றார் அவர்.
இலங்கை நம்பிக்கை:
இதனிடையே, அமெரிக்காவின் தீர்மான விவகாரத்தில் தமிழக கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கும் என இலங்கை நம்புகிறது. "கொள்கை அடிப்படையில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும்' என்று இலங்கை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ விஜேசின்ஹ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"குறிப்பிட்ட நாட்டுக்கு' எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்று இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications