மின்தட்டுப்பாட்டுக்கு திமுக தான் காரணம்: செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு
நெல்லை: திமுக ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் தமிழக தலைவர் செ.கு.தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து எங்கள் கட்சியின் சார்பில் நானும், கட்சி நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றோம். சங்கரன்கேவில் தொகுதி அதிமுகவின் கோட்டை ஆகும். எனவே, அங்கு மீண்டும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
கடந்த 9 மாத கால ஆட்சியில்முதல்வர் ஜெயலலிதா தலித் மக்களின் வளர்சிக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனக்கு கிடைத்த எதிர்கட்சி தலைவருக்கான மரபையும், மான்பையும் காப்பாற்ற தெரியாதவர். திரைப்பட காட்சிகளில் வரும் குழாயடி சண்டை காட்சிகளில் நடிப்பது போல் சட்டமன்றத்திலும் செயல்படுகிறார். அவரது கட்சிக்கு நோக்கம், கொள்கை, திட்டங்கள் என்று எதுவுமில்லை.
தமிழகத்தில் தற்போதது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டிற்கு கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுகவின் நிர்வாக சீர்கேடுகள்தான் காரணம். கடந்த திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ரூ. 40,000 கோடி இழப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாட்டை போக்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் மின்வெட்டை காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications