போலி மது கும்பலுக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு: பொன். ராதாகிருஷ்ணன்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கரூரில் போலி மதுபானம் தயாரிப்பில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாராய வழக்கில் கைதானவர்களுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. சாராயம் காய்ச்சுவது மட்டுமல்லாமல் போலி பிராந்தி, விஸ்கி போன்றவற்றை தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
ஐ.நா. சபையில் மனித உரிமைகள் அமைப்பு கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்தும் அது எந்த பதிலும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழர்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படும் என மழுப்பலான பதிலை கூறியுள்ளார். எனவே, பிரதமர் மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் நம் நாட்டின் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இந்த தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் தமிழர்களுக்கு இதை விட கொடுமையை காங்கிரஸ் கட்சி செய்ய முடியாது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்களை வாபஸ் பெறுவோம் என அக்கட்சி தலைவர் கருணாநிதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் தொழிலாளர்களும், தொழில் அதிபர்களும் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடங்குளத்தை எதிர்த்து சிறு கூட்டம் போராடி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக வெளிமாநில போராளிகள் வரத் தயாராக உள்ளனர். இவர்களை அனுமதித்தால், கூடங்குளத்தை ஆதரித்து போராட வரும் போராளிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications