''கே.ஜி.பாலகிருஷ்ணனின் உறவினர்கள் ஏராளமான சொத்து சேர்த்தனர்''!
டெல்லி: தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணனின் இருந்தபோது அவரது மருமகன்களும் சகோதரரும் பெருமளவு பணம் சேர்த்தது தொடர்பான விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன். இவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், இவரது இரு மருமகன்கள், மகன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்தனர் என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று சமூக நல அமைப்பு ஒன்று சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மூலம் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி ஸ்வதந்தர் குமார்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் வாஹன்வதி, "கே.ஜி. பாலகிருஷ்ணனின் இரு மருமகன்கள், மகனின் சொத்துகள் குறித்து வருமான வரித்துறை இப்போது விசாரணை நடத்தி வருகிறது என்று கூறி தற்போதைய விசாரணை நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில் கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன்கள் மற்றும் மகன்கள் பெருமளவு பணம் சேர்த்தது பற்றிய தகவல்கள் முதல் முறையாக இடபெற்றுள்ளன.
இதையடுத்து, இந்த விசாரணை நிலை தொடர்பாக அடுத்த மூன்று வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டுமென்று நீதிபதிகள், மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த நீதிபதி பாலகிருஷ்ணன், 2000-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார். 2010-ல் ஓய்வு பெற்றபின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆனார்.
கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதியாக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார். இதன் பயனாகத்தான் அவரது உறவினர்கள் சொத்துகளை குவித்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும் இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ள அவரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் அந்த பொதுநலன் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications