மத்திய அரசு கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு மாநிலங்கள் எதிர்ப்பு
டெல்லி: மத்திய உள்துறை செயலாளர் கூட்டிய மாநில தலைமைச் செயலாளர்கள். காவ்லதுறை அதிகாரிகள், கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாத தடுப்பு மையம்
தீவிரவாத செயல்களை ஒடுக்க தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மையத்தை கடந்த 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு தீர்மானித்து இருந்தது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறும் 10-க்கும் அதிகமான மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியும் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று கூறிய அவர்கள், மாநிலங்களில் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 43 (ஏ) பிரிவு அதிகாரம் வழங்குவதால் இந்த மையத்தை ஏற்க முடியாது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். இதேபோல் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பிரதமரை கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த 1-ந் தேதி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதினார். அதில், மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறி இருந்தார்.
தலைமைச் செயலாளர்கள் கூட்டம்
இதையடுத்து, மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் டெல்லியில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி.க்கள்) கலந்து கொண்ட உயர்நிலைக் குழுக் கூட்டத்தை கூட்டி, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கியதோடு, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படாது என்றும் எடுத்துக் கூறினார்.
மாநிலங்கள் எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு, கர்நாடகம் குஜராத், பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, சத்தீஷ்கார் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பிரதிநிதிகள், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மாநில போலீசாரின் அதிகாரத்தை பறிப்பதாக அமையும் என்பதால் அதை ஏற்க இயலாது என்றனர்.
கூட்டத்தில் அவர்கள் பேசுகையில்; தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புலனாய்வு துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அப்படி இருக்கும் போது தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதும், அந்த அமைப்புக்கு கைது நடவடிக்கைக்கான அதிகாரத்தை வழங்குவதும் மாநில போலீசாரின் அதிகாரத்தை குறைப்பதாக அமைந்து விடும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பிரதிநிதிகள், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதை ஆதரித்து பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு மீண்டும் பேசிய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கவலைகளும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி நடைபெற இருக்கும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications