டாக்டர் ராமதாஸை 4 மணி நேரம் விசாரித்த சிபிஐ- பரபரப்புத் தகவல்கள்!

வழக்கமாக ஒரு முக்கியப் புள்ளியிடம் சிபிஐ விசாரணை நடத்தினால் அதுகுறித்த விவரம் வெளியாகி விடும். குறைந்தது, இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றாவது சொல்லி விடுவார்கள். ஆனால் மிக முக்கியமான வழக்கில், மிக முக்கியமான ஒருவரிடம் நடந்த விசாரணை குறித்து சிபிஐ மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட படு ரகசியமாக இந்த விசாரணையை வைத்துள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது, தற்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது சி.வி.சண்முகம் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். அவரது உறவினர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, தம்பி சீனு கவுண்டர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டிருந்தனர். பின்னர் ராமதாஸ், அன்புமணி பெயரை மட்டும் நைஸாக நீக்கியது போலீஸ். இதை எதிர்த்து சண்முகம் உயர்நீதிமன்றத்திற்குப் போனார். அப்போது இவர்கள் இருவரது பெயரையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ராமதாஸின் தம்பி சீனு கவுண்டர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ராமதாஸ், அன்புமணி போன்றோர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ராமதாஸிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை சிபிஐ உறுதிப்படுத்தவில்லை. அதுகுறித்து எந்தத் தகவலையும் அது வெளியிடவில்லை.
ஆனால் தற்போது விசாரணை நடந்தது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. ராமதாஸிடமும், அவரது உதவியாளர் நடராஜனிடமும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடந்துள்ளதாம்.
அதேசமயம், அன்புமணி ராமதாஸிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்து விட்டார்களாம். இந்த விவரத்தையும் சிபிஐ வெளியிடாமல் கமுக்கமாக உள்ளது.
விசாரணை நடத்தப்பட்டதை ஏன் வெளியிடாமல் இப்படி சிபிஐ கமுக்கமாக இருக்கிறது என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையின்போது என்ன தகவல்கள் கிடைத்தன என்ற விவரமும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications