விஜயகாந்த், பிரேமலதா உள்பட 53 தேமுதிகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
சங்கரன்கோவில்: தேர்தல் விதிமுறையை மீறியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, வேட்பாளர் முத்துகுமார் மற்றும் கட்சித் தொண்டர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். விஜயகாந்த் நேற்று முன்தினம் சுவாமி சன்னதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். அந்த இடத்திற்கு அருகில் உள்ள தேரடி திடலில் அதிமுக சார்பில் சமக தலைவர் சரத்குமார் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் குறிப்பிட்ட இடத்தில் இரவு 7.45 மணிக்கு பேசிக் கொண்டிருந்தார். இதனால் சரத்குமார் பிரச்சாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து நகர அதிமுக செயலாளர் கண்ணன் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் அதிக நேரம் பேசுதல், பிரசாரத்தில் பட்டாசு வெடித்தல் தொடர்பாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார். இதே போல் தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் நேற்று நெடுங்குளம் கிராமத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு அரசு ஊழியர் அய்யப்பன் என்பவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீதும், தேமுதிக தொண்டர்கள் 50 பேர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications