இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பேசக் கூட இந்தியா விரும்பவில்லை- ராஜா
டெல்லி: இலங்கையில் நடந்த, இன்னும் நடந்து வருகிற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து பேசக் கூட இந்தியா விரும்பவில்லை. இது பெரும் வருத்தம் அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை வாசித்த பின்னர் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மற்ற யாரையும் விட இந்தியாவுக்குத்தான் நன்றாகத் தெரியும். அப்படி இருக்கும்போது இந்தியாதானே முதலில் அங்கு நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து முதலில் குரல் எழுப்பியிருக்க வேண்டும்.
அமெரிக்கா எழுப்பும் வரை, நார்வே எழுப்பும் வரை ஏன் இந்திய அரசு காத்திருந்தது. இலங்கையில் நடந்த, இன்னும் கூட தொடர்ந்து கொண்டிருககிற மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசக் கூட இந்தியா விரும்பவில்லை என்பதையே அமைச்சரின் அறிக்கை காட்டுகிறது.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதில் நேர்மையானதாக இல்லை.
ஈழத்தில் இலங்கை ராணுவம் என்ன செய்தது என்பது இந்தியாவுக்குத் தெரியாதா. அங்கு 3 லட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து முள் வேலி முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டது எதனால் என்பது இந்தியாவுக்குத் தெரியாதா.
அங்கு தமிழர் பகுதிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சிங்களமயமாக்கல் நடந்து வருகிறது. தமிழர்களின் அத்தனை அடையாளங்களையும் அழித்து விட்டனர். தொடர்ந்து அழித்து வருகின்ரனற். இலங்கை சிங்களர்களின் பூமி என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது.
நான் அமெரிக்காவைக் கேட்கவில்லை, சீனாவைக் கேட்கவில்லை, எனது அரசைத்தான் கேட்கிறேன், இலங்கையில் இந்திய அரசு என்ன செய்துள்ளது. அங்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நிவாரணத்தை இந்திய அரசு கொடுத்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் குறித்து பாரபட்சமற்ற, சுயேச்சையான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இதை இந்தியாதான் முதலில் கோரியிருக்க வேண்டும். அமெரிக்கா செய்யும் வரை கேட்கும் வரை காத்திருந்தது தவறு என்று பேசினார் ராஜா.












Click it and Unblock the Notifications