பிரதமர் அளித்த விருந்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தான். 19 லோக்சபா எம்பிக்கள், 6 ராஜ்யசபா எம்பிக்கள் என மொத்தம் 25 எம்பிக்கள் அந்த கட்சிக்கு உள்ளனர். அவர்களில் 7 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.
சமீபகாலமாக, விலைவாசி உயர்வு, தேசிய தீவிரவாத தடுப்பு மையம், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங் கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார். ஆனால், இதில் மம்தா பானர்ஜியின் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். ரத்னா டி நாக் என்ற பெண் எம்.பி. ஒருவர் மட்டுமே பெயரளவுக்கு விருந்தில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே பாஜக கூட்டணியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் பதவியேற்பு விழாவிலும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் பதவியேற்பு நிகழ்ச்சியுலும் கலந்து கொள்ள மம்தா முடிவு செய்து இருந்தார். ஆனால், காங்கிரசின் கடும் எச்சரிக்கை காரணமாக அந்த முடிவை அவர் மாற்றிக் கொண்டார்.
மேலும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ், ஜனாதிபதி உரையில் அந்தப் பாராவை நீக்கும்படி திருத்த தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இந் நிலையில், பிரதமர் விருந்தையும் மம்தா கட்சி புறக்கணித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், மேற்கு வங்காள மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததை கண்டித்து நாடாளுமறத்துக்கு வெளியே முற்றுகை போராட்டம் நடத்தவும் திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பட்ஜெட்டை கூட மம்தாவின் கட்சி புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது. இன்றைய ரயில்வே பட்ஜெட்டை அவரது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தான் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா கட்சித் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயா நிருபர்களிடம் பேசுகையில், நாங்கள் இன்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கிறோம். ஆனால் மக்கள் நலன் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் எதிர்த்து குரல் கொடுப்போம் என்றார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், 3-வது அணி அமைக்கும் முயற்சிக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா? என்று கேட்டதற்கு, அது குறித்து கட்சி தலைவர் மம்தா பானர்ஜிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
திரிணாமூல் நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ஆபத்து-பிரணாப் முகர்ஜி:
இந் நிலையில் திரிணாமூல் காங்கிரசின் நடவடிக்கையால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் அளித்த விருந்தின்போது திரிணாமூல் காங்கிரஸ் தாக்கல் செய்த திருத்த தீர்மானம் குறித்து பிரணாப் முகர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் ஒரு அங்கம் என்பதால் அந்த தீர்மானத்தை வலியுறுத்த வேண்டாம் என்றும் அவர் வற்புறுத்தினார்.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட எம்.பி.யிடம் திருத்த தீர்மானம் தொடர்பான நடைமுறைகள் விளக்கிக் கூறப்பட்டதுடன், அதையும் மீறி தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது மத்திய அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
விருந்தில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., அரசை கவிழ்ப்பது தங்கள் நோக்கம் அல்ல என்றும், மேற்கு வங்காள மாநில அரசுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதுதான் தங்கள் முக்கிய கோரிக்கை என்று பதில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications