இன்று சங்கரன்கோவிலில் 10 இடங்களில் ஜெயலலிதா சூறாவளிப் பிரச்சாரம்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 16ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் அழகிரி சங்கரன்கோவிலில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலினும் நேற்று முதல் 3 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். அதி்முக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து அனைத்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் தவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று சங்கரன்கோவில் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கும் அவர் பிற்பகல் 2.30 மணிக்கு திருவேங்கடத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குவார் என்று கூறப்படுகின்றது.
திருவேங்கடம், குருவிகுளம், நாலுவாசன்கோட்டை, மலையான்குளம் விலக்கு, சங்கரன்கோவில் கோமதி அம்மன் சந்நிதி தெரு சந்திப்பு, சண்முகநல்லூர் விலக்கு, குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் பஸ் நிறுத்தம், வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் பிரதான சாலை ஆகிய 10 இடங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார். அதன் பிறகு அவர் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
சங்கரன்கோவில் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் பாதையில் உள்ள பாலங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். தொகுதிக்கு என சில திட்டங்களை நிறைவேற்றும் வகையில் சில முக்கிய திட்டங்களையும், மின்வெட்டை அகற்றும் வகையில் சில வாக்குறுதிகளையும் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications