நல்ல வெயில்... ஆங்காங்கு ஜில்லுன்னு மழை: இன்றும் பெய்யுமாம்!

தமிழகத்தில் தற்போது கோடைகாலத்தின் தொடக்கமாகும். இதனால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் வெப்ப நிலை குறைந்து வந்தது. நாகை, காரைக்கால், திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் லேசான மழை பெய்தது.
இதேபோல தூத்துக்குடி மாவட்டம் பரங்கிபேட்டை, சாத்தான்குளம் பகுதிகளில் 3 சென்டி மீட்டரும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துள்ளது.
இன்றும் மழை தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏன் மழை
இந்த மழைக்கு வெப்பச் சலனம்தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் இந்த மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. நிலப்பரப்புகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் கிழக்கில் இருந்து நிலப்பரப்பை நோக்கி வீசும் வேகமான காற்று மிகுந்த ஈரப்பதத்துடன் உள்ளது. இதனால் நிலப்பகுதியை வந்தடையும் ஈரப்பதம் மிகுந்த காற்று மற்றும் இங்கு உள்ள வெப்பம் காரணமாக வெப்பசலனம் ஏற்படுகிறது. இது கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாகும்.
இதன் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
புதன்கிழமையும் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. அந்த மழை பெய்ததே தெரியாத அளவுக்கு மறு நாள் முதல் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications