பிரபாகரன் மகன் கொலைப் படம் முற்றிலும் உண்மையானது, நம்பகமானது-சேனல் 4

2009ம் ஆண்டு மே மாத மத்தியில், ஈழப் போரை கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது இலங்கை ராணுவமும், அதன் அரசும். பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து மண்ணோடு மண்ணாக மூடிப் போட்டு, போரில் வெற்றி பெற்றதாக அது அறிவித்தது.
இறுதிக் கட்டப் போரின்போது குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கிய விடுதலைப் புலிள் மற்றும் தமிழ் மக்களை கொடூரமாகக் கொலை செய்தது இலங்கை ராணுவம். மேலும் சரணடைந்த விடுதலைப் புலி வீரர்களையும் கொடூரமாக் சித்திரவதை செய்து கொன்று குவித்தது இலங்கை ராணுவம். இதுதொடர்பான ஆதாரப் பூர்வமான வீடியோ காட்சிகள் வெளியாகி உலகையே நடுங்க வைத்தது.
மேலும் இதுதொடர்பாக இங்கிலாந்தின் சேனல் 4 நிறுவனம் இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் ஒரு ஆவணப் படத்தை கடந்த ஆண்டு வெளியிட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஆவணப்படத்தை இன்று வெளியிடுகிறது.
இந்த வீடியோ படத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் எப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டான் என்பதை விளக்கும் நேரடியான வீடியோ காட்சி இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் அந்த சிறுவனை கொடூரமான முறையில்சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்கள வீரர்கள். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகவுள்ள நிலையில் உலகம் முழுவதும் மனித நேய ஆர்வலர்கள் பெரும் பதட்டத்துடன் இந்த வீடியோவைக் காண காத்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையானவை அல்ல, திரித்துக் காட்டப்படுபவை என்று வழக்கமான பல்லவியைப் பாடியுள்ளது இலங்கை அரசு. ஆனால் அதை திட்டவட்டமாக சேனல் 4 நிறுவனம் மறுத்துள்ளது.
இதுகுறித்து சேனல் 4 நிறுவனத்திற்காக இந்த ஆவணப்படத்தை தயாரித்த காலம் மெக்காரே கூறுகையில், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானவை, நம்பகமானவை, தடவியல் சோதனை மூலம் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டவை.
முதலில் பாலச்சந்திரனின் மெய்க்காவலர்களை கண்களை மூடி, கைகளைக் கட்டி கொன்றுள்ளனர். அதன் பின்னர் மிக மிக நெருக்கத்தில் வைத்து துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு பாலச்சந்திரனைக் கொன்றுள்ளனர். மொத்தம் ஐந்து குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இங்கிலாந்தின் பிரபலமான தடயவியல் நிபுணரான டெரிக் பெளன்டர் இதை முழுமையாகப் பரிசீலித்து இந்த வீடியோ காட்சிகள் உண்மையானவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பான பல்வேறு வீடியோ காட்சிகளும் எங்களுக்கு்க கிடைத்தன. அவற்றையும் பெளன்டர் தீவிரமாக ஆராய்ந்து உண்மை என்று கூறியுள்ளார்.
எங்களுக்குக் கிடைத்த வீடியோ காட்சிகளை முழுமையாக பரிசோதித்து அதன் இறுதியில் நாங்கள் கண்டறிந்த உண்மை என்னவென்றால், தங்களிடம் சரணடைந்த அத்தனை பேரையும் இதேபோலத்தான் கொடூரமாக இலங்கைப் படையினர் கொன்றுள்ளனர் என்பதே. அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மறுக்க முடியாத உண்மை, சத்தியமான உண்மை என்றார் மெக்காரே.












Click it and Unblock the Notifications