மதுரையி்ல் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபர் கைது !
மதுரை: மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். குளிர்பானம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், பாட்டிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் விற்கப்படுவதாக, குளிர்பான நிறுவன அதிகாரி ஒருவர் மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் துரைசாமி, இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் முனிச்சாலை, பூசாரித் தோப்பு லட்சுமிபுரம் 6வது தெருவில் வசித்த நாராயணன்(40) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கடந்த 2 ஆண்டுகளாக போலி குளிர்பானங்கள் தயாரித்து விற்கப்பட்டது தெரிய வந்தது.
நாராயணனின் தந்தை கண்ணன் தனது வீட்டில் சோடா தயாரித்து விற்று வந்தார். தந்தை இறந்த பிறகு நாராயணன் அத்தொழிலில் ஈடுபட்டார். ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனையடுத்து பிரபல குளிர்பான நிறுவனங்களின் பெயரில் போலி குளிர்பானம் தயாரித்து விற்க முடிவு செய்தார்.
இதற்காக பிரபல குளிர்பான நிறுவனங்களின் சப்-டீலர்களில் ஒருவர் உதவியுடன் காலி பாட்டில்களை சேகரித்து, அதில் போலி குளிர்பானங்களை நிரப்பினார். அதன்பிறகு நிறுவன மூடிக்கு பதிலாக, 'ஸ்பெஷல் டிரிங்ஸ்' என்று அச்சிடப்பட்ட மூடியை பயன்படுத்தி விற்பனைக்கு அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து நாராயணனை கைது செய்த போலீசார், குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள், பாட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக இன்னொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications