பங்காளிச் சண்டை: மதுரையில் பட்டப்பகலில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை-10 பேருக்கு வலை
மதுரை: மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து அண்ணன் மற்றும் தம்பியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். அவரது தந்தை நவக்கோடி. திமுக நகரச் செயலாளராக இருந்த அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நவக்கோடியின் சகோதரர் மகன் கணேசன். அவர் தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருந்தார். தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், கணேசன் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் புலிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கணேசனின் மனைவி சந்திராவும், தங்கபாண்டியனின் மனைவி உமாவும் போட்டியிட்டனர். இதில் உமா வெற்றிப் பெற்றார். கணேசனின் மனைவி சந்திரா பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு இரு குடும்பத்தினருக்கும் இடையே இருந்த விரோதம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தங்கபாண்டியன் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசன், சந்திரா, அவரது மகன்கள் அன்பழகன், கனகவிஜயன், செல்வகுமார், சந்தனகுமார் பாண்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் மேற்கண்ட 6 பேரும் தினமும் ஆஜராஜி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.
இதனையடுத்து 6 பேரும் தினமும் திடீர் நகர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் வேலை செய்து வந்த கணேசனின் மகன்களான சந்தானம், கருத்தப்பாண்டி ஆகியோர் மதுரைக்கு வந்திருந்தனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் கணேசன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கணேசனின் வீட்டிற்குள் புகுந்தது. அந்த கும்பல் வீ்ட்டில் இருந்த சந்தனகுமார் பாண்டி, சந்தானம், கருத்தப்பாண்டி ஆகியோரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது.
இதில் சந்தனகுமார் பாண்டியும், சந்தானமும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு உயிருக்கு போராடிய கருத்தப்பாண்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முன்விரோதம் காரணமாக சந்தனகுமார், சந்தானம் ஆகியோர் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications