இலங்கை விவகாரம்: மன்மோகன் சிங், சோனியா காந்தி உருவ பொம்மைகள் எரிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை எரித்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று செய்திகள் வருகின்றன.
இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் தெளிவான முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு பிரதமரின் உருவ பொம்மையை எரிக்கப்பட்டது.
இதற்காக இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் சந்தனசேகர், இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பலரையும் தூத்துக்குடி மத்திய பாக போலீசார் கைது செய்தனர்.
சோனியா காந்தி கொடும்பாவி எரிப்பு:
கோவை காந்திரபுரம் பெரியார் சிலை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் பெரியார் திகவினர் போராட்டம் நடத்தினர்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என அதிமுக, திமுக உள்பட பல கட்சிகள் வலியுறுத்தியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்காமல் உள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று செய்திகள் வருகின்றன.
இதனைக் கண்டித்து பெரியா திகவின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் காந்திரபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஏராளமான பெரியார் திகவினரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications