தினேஷ் திவேதி நீடிப்பாரா?: ரயில்வே பட்ஜெட்டின் கதி என்ன?
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜியின் நெருக்கடியால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
2012-13-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த காங்கிரஸ் கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி, கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கட்டண உயர்வை அறிவித்தார்.
மக்களுக்கு சுமை ஏற்படுத்தும் மத்திய அரசின் பல்வேறு கொள்கை திட்டங்களை எதிர்த்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ரயில் கட்டண உயர்வுக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், உடனடியாக கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர், தனது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து உடனடியாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதிய அவர், புதிய ரயில்வே அமைச்சராக தமது கட்சியைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான முகுல்ராயை நியமிக்க வேண்டும் ன்றும், அந்த கடிதத்தில் பரிந்துரைத்து இருந்தார்.
ரயில்வே பட்ஜெட் வெளியான நாளில், ஆளும் கூட்டணி கட்சியே கட்டண உயர்வை திரும்பப் பெறவும், அமைச்சரை நீக்கும்படியும் வற்புறுத்தியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு, மம்தாவின் எச்சரிக்கையால் அதிர்ச்சி அடைந்தது.
ரயில்வே பட்ஜெட்டின் கதி என்ன?
அதே நேரத்தில் ரயில் கட்டண உயர்வை ஆதரிக்கும் மத்திய அரசு இந்த முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் மாற்றம் குறித்து நேற்று உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரிணாமுல் காங்கிரசும், மந்திரியை நீக்கும் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதையே முதன்மையாக வற்புறுத்தியது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் ஆன அன்று இதுபோன்ற ஒரு நெருக்கடி இதுவரை வந்தது இல்லை. இந்த சூழ்நிலையில் ரெயில்வே பட்ஜெட்டின் கதி என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் முதன்மை செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கூறியுள்ளதாவது
ஏற்கனவே தாக்கலாகிவிட்டது என்பதால், ரயில்வே பட்ஜெட் தற்போது நாடாளுமன்றத்தின் சொத்து. ரயில்வே அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டால், அவர் பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கான தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில் புதிய அமைச்சர் நியமிக்கப்படாவிட்டால், பட்ஜெட்டை நிறைவேற்றும் பொறுப்பை பிரதமரே ஏற்றுக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்தவரை ரெயில்வே பட்ஜெட் தாக்கல் ஆனதும், ரயில்வே அமைச்சர் நீக்கப்பட்டதாக இதுவரை முன் உதாரணம் எதுவும் இல்லை'' என்றார்
குழப்பம் நீடிப்பு
.
இந்நிலையில், தினேஷ் திவேதி நீக்கப்பட வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி பிடிவாதமாக இருக்கிறார். கட்டண உயர்வு தொடர்பாக தம்மையோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளரையோ (முகுல்ராய்) திரிவேதி கலந்து பேசவில்லை என்று குற்றம் சாட்டிய மம்தா, கட்சியில் கட்டுப்பாடுதான் முக்கியமே தவிர, அதைவிட உயர்ந்தவர்கள் என்று யாரும் இல்லை என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், இந்த விவகாரத்தால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், முழுமையாக 5 ஆண்டு காலம் பதவியில் நீடிக்கும் என்றும், திரிணாமுல் காங்கிரசின் சுதிப் பந்தோபாத்யா நேற்று தெரிவித்தார்.
"திரிவேதியை ராஜினாமா செய்யும்படி கட்சி சார்பில் வற்புறுத்தவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்கள் கட்சித்தலைவரும், பிரதமரும்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றும் அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்பதுதான் தங்கள் முதன்மை கோரிக்கை என்று குறிப்பிட்டார்.
கேள்வி ஒன்றுக்குப்பதில் அளித்த அவர், "ரயில்வே பட்ஜெட் விவாதத்திற்குப்பின் கட்டண உயர்வு வாபஸ் அறிவிப்பு வெளியிடப்படும். புதிய அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்'' என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications