டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஈரானியர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு வலியுறுத்தல்
டெல்லி: டெல்லி இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பில் மேலும் 3 ஈரானியர்களுக்குத் தொடர்பிருப்பதாக மத்திய அரசு முதன்முறையாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் ஸ்டிக்கர் குண்டுமூலம் கடந்த மாதம் தகர்க்கப்பட்டது. இதில் ஈரான் பத்திரிகை ஒன்றுக்கு பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் ஈரான் தூதர் மெக்தி நபிஜதேவை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் இஸ்ரேல் கார் குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக விவாதித்தனர்.
குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த உடனேயே ஈரானின் சதிவேலை என்று இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இந்தியா கருத்து எதனையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் மேலும் 3 ஈரானியர்களுகுத் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் சம்பவம் நடந்த உடனேயே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தேசிய புலனாய்வு முகாமையின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஈரான் தூதருடனான நேற்றைய சந்திப்பின் போது மூன்று ஈரானியர்களுக்கு எதிரான பிடிவாரண்ட் மற்றும் ரெட்நோட்டீஸ் விடுத்திருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
டெல்லி குண்டுவெடிப்புச் சதியில் தொடர்புடையவர்களாக ஹெளசங் அப்சர் இரானி, சையத் அலி மகதின்சர் மற்றும் மொகமதெர்ஜா ஆகியோர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
இம்மூவரையும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்த ஈரான் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அந்நாட்டுத் தூதரிடம் வலியுறுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications