மதுரை ஏர்போர்டில் துப்பாக்கி தோட்டாகளோடு சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!
மதுரை: மதுரை விமான நிலையத்தில் 21 துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமியை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.சி.பழனிச்சாமி. இவர் மதுரையில் இருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய பைகளை போலீசார் ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது அவரது மருந்து பையில் ரிவால்வருக்குரிய 15 தோட்டக்களும், பிஸ்டலுக்குரிய 6 தோட்டாக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமியை அவரது காரிலேயே பெருங்குடி போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு திருமங்கலம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விசாரித்தார். அப்போது தனது வேலைக்காரர் மருந்து பையில் தோட்டாக்களை தவறாக வைத்து விட்டதாக கே.சி. பழனிச்சாமி கூறினார். பின்பு கே.சி.பழனிச்சாமியிடம் மதுரை எஸ்.பி., ஆஸ்ராகர்க் தனியாக விசாரணை நடத்தினார்.
3 மணி நேர விசாரணைக்கு பிறகு இது குறி்த்து போலீசார் கூறியதாவது,
இரு கைத் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள கே.சி.பழனிச்சாமி முறையாக அனுமதி பெற்றுள்ளார். தோட்டாக்கள் தவறுதலாக எடுத்து வந்ததே குழப்பத்திற்கு காரணம். விமான நிலைய பாதுகாப்பு விதிகளின்படி விமானத்தில் தோட்டாக்களுடன் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி அவரிடம் எழுதி வாங்கியுள்ளோம். போலீசார் பறிமுதல் செய்த தோட்டாக்களை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டோம் என்றனர்.
இது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் கே.சி. பழனிசாமி துப்பாக்கி தோட்டாக்களோடு சிக்கி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications