"உண்மையாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம்'' - கருணாநிதி மழுப்பல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தலில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: மத்திய அரசு பட்ஜெட்டில் சேவை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளதே?
பதில்: சென்னைக்கு வர மதுரையில் விமானம் பிடிக்க வந்தேன். மதுரையில் விமானம் ஏறும் முன் பாராளுமன்றத்தில் பட்ஜெட் படிக்க தொடங்கப்பட்டது. நான் சென்னை வருவதற்குள் பட்ஜெட் படித்து முடிக்கப்பட்டுவிட்டது. இதனால் பட்ஜெட் உரையில் என்ன உள்ளது என்று எனக்கு தெரியாது. பட்ஜெட் உரையை முழுமையாக படித்து பார்த்தபின்னர் தான் பதில் கூறமுடியும்.
தி.மு.க. மந்திரிகள் புறக்கணிப்பா?
கேள்வி: பாராளுமன்றத்தில் பட்ஜெட் படிக்கும் போது தி.மு.க.வை சேர்ந்த 4 மந்திரிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் கருத்து கூறியதால் தி.மு.க. மந்திரிகள் புறக்கணித்தார்களா?
பதில்: இது உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸா?
கேள்வி: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டு உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு வழங்கப்படும் ஆதரவு வாபஸ் பெறப்படுமா?
பதில்: இந்த கேள்வியை கடந்த 2 தினங்களாக கேட்கிறீர்கள். நானும் இது பற்றி தெளிவாக பதிலளித்து விட்டேன். இந்த பிரச்சினையில் தி.மு.க. செயற்குழு முடிவு செய்யும் என தெரிவித்து உள்ளேன்.
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த என்னை திடீரென வழிமடக்கி இந்த கேள்வியை திடீரென கேட்டு உள்ளீர்கள். இதற்காக நான் திடீரென பதில் அளிக்க முடியாது. இது கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நான் ஒருவனே முடிவு செய்து அறிவிக்க முடியாது. இதனால்தான் தி.மு.க. செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று கூறினேன்.












Click it and Unblock the Notifications