வேலூரில் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்பாட்டம்
வேலூர்: வாரம் ஒரு நாள் விடுமுறையை ரத்து செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் கோரி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் விடப்படும் ‘வாரம் ஒரு நாள் விடுமுறையை’ தளர்வு செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி. லதா பேசியதாவது,
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு விடப்படும் வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது கறிக்கோழி வளர்ப்பிற்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கோழி வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு நாள் விடுமுறையை ரத்து செய்து, தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் ஆர்.குலசேகரன், மாவட்டச் செயலாளர் எம்.இந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications