கடினமான இயற்பியல் தேர்வு: மாணவர்கள் கலக்கம்- கூடுதல் மதிப்பெண் வருமா?
சென்னை : பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 8ம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு நடைபெற்றது. தொழிற்கல்வி படிப்புக்கு முக்கியமாக கருதப்படும் இயற்பியல் தேர்வு மாணவர்களை கலக்கம் அடைய செய்தது. இதற்கு காரணம் அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் மாணவர்கள் எதிர்பார்க்காத பகுதியில் இருந்து கேட்கப்பட்டதே.
பகுதி ஒன்றில் இடம்பெறும் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 2 கேள்விகள் மாணவர்களை திசை திருப்பி கேட்கப்பட்டுள்ளன.
பொதுவாக இந்த இந்த பாடங்களில் இந்த இந்த கேள்விகள் தேர்வில் கேட்கப்படலாம் என்று ஆசிரியர்கள் இனம் காட்டிய கேள்விகள் எதுவும் இந்த முறை இடம் பெறவில்லை. கடந்த 5 ஆண்டு தேர்வு கேள்வித் தாள்களை வைத்து தேர்வுக்கு தயாரான மாணவர்கள், தேர்வு அறையில் வழங்கப்பட்ட கேள்வித் தாளை பார்த்து உச்ச கட்ட அதிர்ச்சி அடைந்துள்ளனர். பகுதி 3ல் இடம் பெற வேண்டிய 5 மதிப்பெண்ணுக்குரிய கேள்விகளில் 2 கேள்விகள் பகுதி 4ல் கேட்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளை விரிவாக எழுத முடியாது. மேலும், அனைத்து கேள்விகளுமே கடினமான பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டதை பார்த்து, எதை முதலில் எழுதுவது, எப்படி எழுதுவது என்று கலக்கம் அடைந்தனர். கடினமாக கேள்வி இடம் பெற்றதால் மாணவர்கள் பெரும்பாலும் பதற்றமாகவே தேர்வுகளை எழுதியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையால் சிரமப்பட்டு வரும் மாணவர்கள் கடினமான கேள்வித்தாள்களால் அதிகம் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வு மிகவும் கடினம்தான். அவர்கள் தேர்ச்சி பெற்றாலே ஆச்சரியம்தான் என்பது பெரும்பாலானோரின் கருத்து.
மாணவர்கள் கலக்கம்
தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள், எதிர்பாராத பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் இயற்பியல் தேர்வு எழுத சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். வழக்கமான பாடத்தில் இருந்து கேட்கப்படவில்லை. கட்டாய கேள்விகள் எல்லாமே புளு பிரின்ட்டில் தெரிவித்தபடி கேட்கப்பட வில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
ஆனால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இயற்பியல் தேர்வுக்காக வழங்கப்பட்ட கேள்வி தாள் வழக்கமான புளு பிரின்ட்படிதான் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறை சார்பில், மாதிரி கேள்வி தாள் வெளியிடப்பட்டது. அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். அதனால், மாணவர்கள் குழப்பமாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது. வல்லுனர் குழு, பாட ஆசிரியர் குழுவை வைத்து ஆய்வு செய்ய உள்ளோம். அதன்
பிறகு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தாலோ, பாட திட்டத்துக்கு வெளியே கேட்கப்பட்டிருந்தாலோ அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications